மூன்று வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த காமுகனுக்கு, விழுப்புரம் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. அவன் சாகும் வரை தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் பவானி(3). கடந்த ஆண்டு நவ.,18ம் தேதி மாலை விளையாடச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்த பின், மறு நாள் காலை நகராட்சி பள்ளி அருகே உள்ள முட்புதரில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். திண்டிவனம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையைச் சேர்ந்த பிரபாகரன் மகன் துரைராஜ் (31) என்பவரை கடந்த ஆண்டு நவ., 23ம் தேதி கைது செய்தனர்.
மெக்கானிக் வேலை செய்த துரைராஜ், போதைப் பழக்கத்தோடு, பெண்கள் சகவாசம் இருந்ததால் எய்ட்ஸ் நோய் பாதித்து மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்திருந்தார். கடந்த ஆண்டு நவ., 18ம் தேதி திண்டிவனம் சேடன் குட்டைத் தெருவில் உள்ள தனது தம்பி முருகன் வீட்டிற்கு வந்தார். திண்டிவனத்தில் மது அருந்திய துரைராஜ் போதையில் சுற்றித் திரிந்தார். நகராட்சி பள்ளி அருகே விளையாடிய குழந்தை பவானியை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அப்போது குழந்தை மூச்சுத் திணறி இறந்தது. இதனால், குழந்தையின் உடலை முட்புதரில் வீசியதை துரைராஜ் போலீசாரிடம் ஒப்புக் கொண்டான்.
துரைராஜ் மீது கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி சின்னப்பன் நேற்று தீர்ப்பு வழங்கினார். குழந்தையை கற்பழித்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், இயற்கைக்கு முரண்பாடான வகையில் குழந்தையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்கு மற்றொரு ஆயுள் தண்டனையும், கொலை செய்து தடயங்களை மறைத்த குற்றத்திற்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இவை அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் விதித்த உத்தரவை மேற்கோள் காட்டிய நீதிபதி சின்னப்பன், மனிதநேயமற்ற வகையில் நடந்து குழந்தையை கொலை செய்த குற்றவாளியான துரைராஜ் சாகும் வரை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுவரை தண்டனையில் எந்த குறைவும் இல்லாமல் முழுமையாக அனுபவிக்க வேண்டுமென உத்தரவில் தெரிவித்திருந்தார்.
அனுப்பியவர் செல்வம்
source http://www.dinamalar.com
Related Articles :
source http://www.dinamalar.com
0 comments:
Post a Comment